get paid to paste

jeymo&ayyanaar

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

இயல் விருது விழாவில் தங்களை சந்தித்தது மகிழ்வளித்தது. உங்களுடன் சிறில் அலெக்ஸ் அவர்களை பார்த்ததும்.

சினிமா சார்ந்து செயல்படுவதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் முக்கியமானது. பணத்தின் அருமையை உங்கள் அளவிற்கு வேறு எழுத்தாளர்கள் கூறியதில்லை. ஆனாலும் சிறந்த எழுத்துக்கள் நம் ஏழை எழுத்தாளர்கள்தான் எழுதியுள்ளார்கள். நீங்கள் கூட அதிகப் பணம் இல்லாதபோதுதான் உங்களின் மிகச்சிறந்த படைப்புக்களை கொடுத்துள்ளீர்கள் .

நீங்கள் எழுத்கியுள்ளதைப் படிக்கும் ஒரு ஏழை நவீன எழுத்தாளன் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. பணம் மட்டுமே சிறந்த எழுத்துக்களை உருவாக்க முடியுமா என்பது தெரியவில்லை.
ஏழாம் உலகம் நாவலைப் படித்தவர்கள் நான்கடவுள் படத்தின் முக்கியப் பகுதிகள் அதில் இருந்து எடுக்கப்பட்டவைகள் என்பதை வெளிப்படையாகவே அரிய முடியும் . அச்சில் வந்து பல பதிப்புகள் வந்துள்ள நீங்கள் எழுதிய ஒரு நூலின் கதையை பாலாவிற்கு விட்டுக் கொடுப்பதின் காரணம் என்ன. உங்கள் பொதுவான போர்க்குணத்தை சினிமா தின்றுவிட்டதா. மேல்தட்டு வாழ்க்கைக்கு பலி கொடுத்துவிட்டீர்களா.

வைரமுத்து போன்றவர்களை நவீன இலக்கியம் சார்ந்தவர்கள் பொருட்படுத்தியதில்லை. ஆனால்
மரபின் மைந்தன் முத்தையா எழுதிய வைரமுத்து பற்றிய நூலுக்கு நீங்கள் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு வருத்தமடைந்தேன்.

முழுமையாக கிடைத்துள்ள உங்கள் முழு நேரத்தை நல்ல படைப்புக்களுக்கு ஒதுக்கினால் அது தமிழ் இலக்கியத்திற்கு நல்லது. இணையம் மூலம் உங்களுக்கு கிடைத்துள்ள வாசகர்களை மேம்படுத்தவும் அது உதவும்.

மிக்க அன்புடன்,
அய்யனார்

அன்புள்ள அய்யனார்,

இந்தவகையான கடிதங்களை நான் தொடர்ச்சியாக பெற்றுக்கொண்டே இருக்கிறேன். இந்த மனநிலையை எப்போதும் கூர்ந்து கவனிப்பதுண்டு. இலக்கிய மதிப்பீடுகள் மீதும் அடிப்படை அறங்கள் மீதும் ஆழமான பற்றுடன், அவை இழக்கப்படுகின்றனவா என்ற பதைப்பை பாவனை செய்தபடி, இவை எழுதப்படுகின்றன.

உண்மையில் அப்படித்தானா? எழுதுபவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதனைசெய்துகொள்வார்கள் என்றால் அதில் உள்ள போலித்தனம் அவர்களுக்கு தெரியக்கூடும். ஆனால் பொதுவாக அத்தகைய நுண்ணுணர்வு கொண்டவர்கள் இப்படி எழுத முற்படுவதில்லை. அவர்களின் மனம் இயங்கும்தளமே வேறு.

நீங்கள் எழுதிய கடிதத்தையே பார்ப்போம். அதன் ‘கவலைகள்’ என்னென்ன? ஒன்று எனக்கு இலக்கியம் மீதுள்ள பற்று மற்றும் அர்ப்பணிப்பு குறித்தது. இரண்டு என் கருத்துக்களில் எனக்குள்ள நேர்மை குறித்தது. அதாவது ஒட்டுமொத்தமாக என்னுடைய தனிப்பட்ட ஆளுமையின் மீதான ஐயம்.

இதற்கு முன்னரும் நீங்கள் இம்மாதிரி கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள். தொண்ணூறுகள் முதலே. உங்கள் பேட்டிகளின் மையக்கரு என்பது இலக்கியவாதியின் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையை ஐயப்பட்டு அவனிடம் வினவுவதாகவே இருக்கும். அதற்காக ஒரு செயற்கையான ‘களங்கமின்மை’யை நீங்கள் பயின்று கடைப்பிடிக்கிறீர்கள். [உங்கள் முன்னால் முதலாளி காலச்சுவடு கண்ணன் சொற்களில் Professionally Innocent]

ஓர் இலக்கியவாதியின் நேர்மையை, அர்ப்பணிப்பை ஐயப்பட தங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை எப்போதேனும் இவர்கள் எண்ணிப்பார்ப்பதுண்டா என்று நான் நினைப்பதுன்டு. அவனது ரத்தம் படிந்த எழுத்துக்கள் மீது கால்வைத்து நின்றுகொண்டு இந்த தீர்ப்புகளை எந்தவிதமான கூச்சமும் இன்றி செய்ய முற்படுகிறார்கள் இவர்கள்.

என் அர்ப்பணிப்புக்கான ஆதாரங்கள் என் இலக்கிய ஆக்கங்கள். கடந்த இருபதாண்டுக்காலமாக இலக்கியத்தை மட்டுமே வாழ்க்கையின் தளமாகக் கொண்டு நான் செயல்பட்டு வருவதை அவை எந்த எளிய வாசகனுக்கும் காட்டும். கடும்உழைப்பும் மனக்குவிப்பும் இன்றி, உக்கிரமான தியாகங்கள் இன்றி அவற்றை ஒருவன் எழுதியிருக்க இயலாது என்று அவன் புரிந்துகொள்வான். அந்த வாசகனுக்கு என் அர்ப்பணிப்பு குறித்த எந்த ஐயமும் எழாது. உங்களைப்போன்றவர்களின் ஐயங்கள் எந்த இலக்கிய ஆக்கத்தையும் வாசிக்காமல் இலக்கிய வம்புகளினூடாகவே இலக்கியப்பயணம் நிகழ்த்துவதன் விளைவுகள்

ஓர் எழுத்தாளனாக என்னுடைய மிகச்சிறந்த வெளிப்பாட்டை நிகழ்த்தவேண்டுமென்பதே என் இலக்கு. என்னுடைய தனி வாழ்க்கையை நான் அதற்காகவே அமைத்துக்கொண்டுள்ளேன் என்பது என் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் தெரியும். எளிமையான அலுவலகப் பணிக்கு அப்பால் செல்வதில்லை, லௌகீக இலக்குகளை வைத்துக்கொள்வதில்லை என்ற முடிவை எடுத்துக்கொண்டமையால்தான் நான் அதிகமாக எழுத முடிந்தது. இன்றும் எந்த உலகியல் இன்பங்களுக்கும் பின்னால் செல்லாத தன்மையையே என் வலிமையாகக் கொண்டிருக்கிறேன்.

என் எழுத்து அடிப்படையில் ஆன்மீகத் தேடல். நிலையான சீரான வாழ்வல்ல, பயணமும் அலைதலுமே அதன் வழி. அதன் அழுத்தங்களும் தேவைகளும் எப்போதும் ஒன்றல்ல. இந்த பருவத்தில்தான் ஒரு சராசரி குடும்பத்தலைவன் மேல் பொறுப்புகள் அதிகமாகின்றன. அதேசமயம் இந்த வயதில்தான் நான் இதுவரை சேர்த்துக்கொண்டவற்றையெல்லாம் உதறி மேலே செல்லவும் வேண்டியிருக்கிறது. அந்த முன்னகர்வு எளிதல்ல. அதன் தத்தளிப்புகளையும், சங்கடங்களையும், அலைபாய்தல்களையும் இலக்கிய ஆக்கங்கள் வழியாக இலக்கியவாதியை அறிய முடியாத உங்களைப்போன்ற ஒருவரிடம் விவாதிக்க முடியாது.

மீண்டும் மீண்டும் இந்த உலகியல் வாழ்க்கை என்னை கட்டிப்போடாத சுதந்திரத்தை நான் தேடிக்கொள்கிறேன். தேவைகளை குறைப்பது ஒருபக்கம். கௌரவங்களையும் பொறுப்புகளையும் ஏற்க மறுப்பது இன்னொரு பக்கம். பொருளியல் சுதந்திரம் அதன் இன்னொரு பக்கம் மட்டுமே. அது எல்லா எழுத்தாளர்களுக்கும் உரிய நிபந்தனை அல்ல. நான் கஞ்சி காய்ச்சும் எழுத்தாளன் அல்ல, வரலாற்றை உருக்கி வார்ப்பவன்.

என் வாழ்க்கையில் எதையுமே எப்போதுமே ரகசியமாக வைத்துக்கொண்டதில்லை. அதை எனக்கான ஒரு விதியாகவே வைத்திருக்கிறேன். என் வாழ்க்கை என் வாசகர்களுக்கு முழுமையாகவே அறிவதற்குரிய ஒன்றே. என் ஆக்கங்கள் வழியாக. என் கட்டுரைகள் வழியாக. என் தத்தளிப்புகளும் தோல்விகளும் கூட அவ்வாறு வெளிப்படையானவை. நான் முழுமையானவன் என்று சொல்லவில்லை. அதை நோக்கிச் செல்பவன்.

என் ஆக்கங்களை தொடர்ச்சியாக வாசிக்கும் எவரும் என் கருத்துக்களின் ஒட்டுமொத்தமான திசையை, அவற்றில் நான் கொண்டிருக்கும் ஒழுங்கை உணர முடியும். அவற்றில் நான் கொண்டிருக்கும் குழப்பங்களோ சிக்கல்களோ அவர்களின் பார்வையில்படக்கூடும். ஆனால் ஒருபோதும் சுயநலம் சார்ந்த சமரசங்களை பார்க்கமுடியாது என்றே கூறுவேன்.

ஆனால் என் வாசகர்களே அதைப்பற்றி என்னிடம் உரையாடும் தகுதி கொண்டவர்கள். வம்பாளர்களை என் தணிக்கையாளர்களாக வைத்துக்கொண்டு அவர்களின் சான்றிதழ்களை நான் தேடிக்கொண்டிருக்க இயலாது. ஆகவே உங்கள் தரத்தில் வரும் கடிதங்களுக்கு பொதுவாக நான் பதில் அளிப்பதில்லை. பல கடிதங்களுக்கான பொதுவான பதில் இது.

இப்போது சாதாரணமாக வரும் கடிதங்கள், நான் சினிமாவில் நுழைந்து ‘சமரசம்’ செய்துகொண்டதாகவும் சுயகௌரவத்தை இழந்துவிட்டதாகவும் ‘கவலை’ப்பட்டு எழுதப்படுகின்றன. அப்படி நிகழ்கிறதா என்ற ஆவலுக்கும் மேலாக அப்படி நிகழவேண்டுமே என்ற ஆசையே இந்த கடிதங்களின் பின்னால் உள்ள மனநிலை. அன்றாட சமரசங்கள் வழியாக சுயஇழிவுகளினூடாக வாழ்பவர்களின் அற்ப ஆசை இது. தங்கள் தனி வாழ்க்கையில் எந்த விதமான மதிப்பீடுகளையும் பேணிக்கொள்ள முடியாது போன இவர்கள் மதிப்பீடுகளின் பிரதிநிதிகளாக இருப்பவர்களின் சரிவை உள்ளூர ஆசைப்படுகிறார்கள். ‘எல்லாரும் நம்மள மாதிரித்தான் மாப்ள’ என்ற எளிய ஆறுதலை தேடுகிறார்கள்.

சினிமா குறித்து உங்கள் கேள்விகளை விவாதிப்பதே அபத்தமாக இருக்கிறது. ‘நான் கடவுள்’ பாலாவின் கதை, திரைக்கதை. அதற்கு நான் வசனம் எழுதியபோது என் நாவலின் சூழலின் சில அம்சங்களை மட்டும் அதில் சேர்த்துக்கொண்டேன். அது என் தெரிவு. இன்றைய தமிழ் சினிமாவில் வசனம் என்பது திரைக்கதைக்கு உதவுவது என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. வசனத்தை மட்டும் யாரும் தனியாக எழுதிவிட முடியாது. நான் கடவுளின் வசனத்தில் பிறரது பங்கு உண்டு.

இன்றைய தமிழ் சினிமாவின் தளத்தில் அதன் படைப்புப் பங்களிப்பு எப்போதுமே கூட்டான ஒன்று. எழுத்தாளனின் பங்களிப்பு என்பது இன்றும் வரையறுக்கப்படாமலேயே உள்ளது. ஓர் இலக்கிய ஆக்கம் தமிழ் சினிமாவுக்குள் வருவதும் அங்கீகரிக்கப்படுவதுமே முக்கியமான திறப்புதான். அதுவே இன்று காவல்கோட்டத்தின் இடத்தை உருவாக்குகிறது.

சினிமாவில் எழுத்தாளர்கள் கௌரவத்தை இழக்கவேண்டும் என்ற ஆசையை இணையத்திலும் பலரிடம் கண்டுகொண்டிருக்கிறேன். எத்தனை எள்ளல்கள், எத்தனை அற்பக் குதூகலங்கள். உண்மை, சினிமாவில் எழுத்தாளர்களுக்கு இன்று இயல்பான இடம் ஒன்று இல்லை. அதாவது அவன் படைப்புரீதியாக என்ன செய்யமுடியும் என்பது தெளிவாக இல்லை. அது எழுத்தாளர்கள் உள்ளே நுழைந்து எழுதி, வெற்றி காட்டி நிரூபித்து எடுக்க வேண்டிய ஒன்று. எழுபதுகளில் எம்.டி.வாசுதேவன் நாயரும் பத்மராஜனும் அப்படித்தான் மலையாளத்தில் சாதித்தார்கள். அது மலையாள சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது.

அது தமிழில் நிகழலாம், நிகழாமலும் போகலாம். ஆனால் பல எழுத்தாளர்கள் வழியாக அந்த முயற்சி நிகழவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதற்கான போராட்டங்கள் வெற்றி தோல்விகளுடன், பலவகையான சறுக்கல்களுடன், சிக்கல்களுடன், மோதல்களுடன்தான் நிகழ முடியும். எழுத்தாளன் தன் அகங்காரத்தை சோதித்துப்பார்க்க வேண்டிய இடமல்ல சினிமா.

ஆனால் சினிமாவில் எல்லா எழுத்தாளர்களும் தனிப்பட்ட முறையில் அபாரமான மரியாதையைத்தான் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். சினிமாவில் நான் சந்தித்தவர்களில் எனக்கு அந்த முதல்மரியாதையை அளிக்காதவர்கள் என எவரும் இல்லை. பணம் என்ற அளவிலும் அப்படித்தான் – ஒருவர்கூட நான் கேட்டு பணம் பெறும் நிலையை எனக்கு உருவாக்கியதில்லை. நான் பணியாற்றிய எந்த இயக்குநரையும் பெயரிட்டு அழைக்கக்கூடிய, அவர்களின் தனிவாழ்க்கையில்கூட பங்கெடுக்கிற நண்பராகவே இருந்திருக்கிறேன்.படப்பணி முடிந்த பின்னரும்கூட.

அது இலக்கியம் உருவாக்கியளிக்கும் இடம். ஏனென்றால் இணையத்திலும், சிற்றிதழ்களிலும் எந்த இலக்கிய நூல்களையும் வாசிக்காமல் வம்புபேசும் உங்களைவிட அதிகமாகவே சினிமாக்காரர்கள் இலக்கிய நூல்களை வாசித்திருக்கிறார்கள். அவற்றில் மனம் பறிகொடுத்திருக்கிறார்கள். அவற்றின் வழியாக இலக்கியவாதியின் மனத்தை அறிந்திருக்கிறார்கள்.

உண்மையில் தமிழ் எழுத்தாளன் அவனது மிக மோசமான அவமதிப்புகளை அடைவது இலக்கியத்தை வம்புகளாக மட்டுமே அறிந்து இலக்கியச்சூழலில் புழங்கும் உங்களைப்போன்றவர்களிடமே. அந்த அவமதிப்பு அவன் எந்த சாதனை ஆற்றியிருந்தாலும் அதற்காக எந்த தியாகங்களைச் செய்திருந்தாலும் விலகுவதில்லை. அடுத்தபடியாக நம் கல்விநிலையங்களில் அவனுக்கு அவமதிப்பு திரண்டிருக்கிறது. நான் முற்றிலுமாக தவிர்க்க நினைப்பது உங்கள் இரு சாராரையுமே.

வைரமுத்துவின் ஆக்கங்களைப்பற்றி நான் என்ன எழுதியிருக்கிறேன் என உங்களுக்கு தெரியுமா? எப்போதுமே அவரை வானம்பாடி இலக்கிய அழகியலின் சிறந்த உதாரணமாகவே சொல்லியிருக்கிறேன். அந்த அழகியல் எனக்கு உடன்பாடானதல்ல அவ்வளவே. தமிழின் ஆகச்சிறந்த பாடலாசிரியராக நான் அவரைத்தான் பார்க்கிறேன். அவற்றை மிக விரிவாக எழுதியிருக்கிறேன் — அவருக்கு சாகித்ய அக்காதமி விருது கொடுக்கப்பட்டதைக் கண்டித்து எழுதிய கட்டுரையில்கூட! அவரை புனைகதையாசிரியராக நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

வைரமுத்துவின் ஆளுமைச் சித்திரம் குறித்த மரபின்மைந்தனின் நூலில் எப்படி அவரது ஆளுமை கணிசமான இளைஞர்களிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது என்பதை குறிப்பிட்டிருக்கிறேன். பொதுவாக கவிஞர்கள் உருவாக்கும் சோர்வுமனநிலைக்கு மாற்றாக அவர் உருவாக்கும் ஊக்கமே அதற்குக் காரணமாக இருக்கலாமென குறிப்பிட்டிருக்கிறேன். உடனே ‘அப்ப திட்டினான் இப்ப பாராட்டுறான். ஏதோ இருக்கும்போல’ என்ற உங்களின் வம்பு மனநிலை வேலைசெய்கிறது.

இப்போது பாலகுமாரனின் ‘உடையார்’ வாசிக்கிறேன். தமிழின் முக்கியமான படைப்புகளில் ஒன்று அது. நடையின் மேலோட்டமான தன்மையை விட்டுவிட்டு பார்த்தாலும் ஒரு மாபெரும் இலக்கிய முயற்சி. நான் அதைப்பற்றி நாளை எழுதினதுமே ‘அப்ப பாலகுமாரன வஞ்சீங்க இப்ப ஏன் பாராட்டுறீங்க?’ என்று ஒரு கடிதத்தை உங்களைப்போன்றவர்கள் தட்டி விடுவீர்கள்.

ஆனால் எனக்கு இந்த வம்புகள் புதியனவல்ல. நான் எழுத ஆரம்பித்தபோதே இதைத்தான் சந்தித்தேன். சுஜாதாவையும் கல்கியையும் அங்கீகரித்து எழுதிய ஆரம்ப நாட்களில் ‘அந்தப்பக்கம் போய்ட்டீங்களா?’ என்று இதே நீங்கள் கேட்டதை நினைவுகூர்கிறேன். உங்களைப்போன்றவர்களின் கண்முன்னால், நீங்கள் அறியாமல், என் இலக்கிய பங்களிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

புறக்கணிப்பை மட்டுமே கோரும் இந்த வம்புகளைப்பற்றி எழுதுவதற்கான காரணம் ஒன்றே. வாசிப்பை விட வம்பு அதிகமாக உள்ள தமிழ்ச்சூழலில் எந்த இலக்கியவாதியும் சந்திக்க நேரும் சிக்கல் இது. ஏளனம், திரிபு, மூட்டிவிடுதல். இதைத்தாண்டித்தான் நாம் எழுத வேண்டியிருக்கிறது. இலக்கு தெளிவாக இருந்தால் அதைமட்டுமே நோக்கவேண்டும். என்ன செய்கிறோம் என்பதே பதிலாக அமையும்.

உதாரணமாக, சென்ற பலநாட்களாக எனக்கு வரும் கடிதங்களின் மையக்கேள்வி நான் ஒரு குறிப்பில் ‘கமல் அவர்கள்’ என்று சொன்னதைப்பற்றியது. அது பெரிய சமரசம் என்றும் வீழ்ச்சி என்றும் எழுதினார்கள். எனக்கு கமல் அவர்கள் நெருக்கமானவரல்ல என்பதனாலும், அவர் என்னை ‘ஜெயமோகன் அவர்கள்’ என்று சொல்வதனாலும்தான் அப்படிச் சொல்கிறேன் என்று சொன்னேன். அதற்கு ‘அதெல்லாமில்லை, நீங்கள் அவருக்கு எழுதப்போகிறீர்கள்’ என்று பதில் வருகிறது.

இந்த அற்ப ஆசைகளுக்கு என்ன பதில் சொல்வது? ‘சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். சமரசம் செய்து வீழ்ந்துபோன ஒருவனை கொள்கைக்குன்றான நீங்கள் மேற்கொண்டு வாசிக்கவேண்டாம்’ என்று பதில் சொன்னேன். உங்களுக்கு அதுவும் சொல்லமுடியாது -நீங்கள் வாசிப்பதும் இல்லை.

ஜெ

Pasted: Jul 23, 2010, 7:48:58 am
Views: 144